டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்டோஸ்கோபி வார்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அந்த வார்டில் இருந்து நோயாளிகள் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்டோஸ்கோபி வார்டில் தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் பதற்றமடைந்தனர். தீ விபத்தை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து நோயாளிகளை பத்திரமாக மீட்டு அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ மற்ற இடத்திற்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

தீ விபத்து காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை பரவி வருகிறது. இந்த தீ விபத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.