‘சந்திரயான்-3’ எடுத்த முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் அனுப்பப்பட்ட நேரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பியுள்ளது. அந்த முதல் வீடியோவை இஸ்ரோ நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 14-ந்தேதி விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நிலவுக்கான சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அவ்வாறு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ‘சந்திரயான்-3’ விண்கலம் அனுப்பப்பட்ட நேரத்தில், அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த உயர் தொழில்நுட்ப கேமரா, நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகளை இஸ்ரோ நிறுவனம் நேற்று தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. சுமார் 45 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், நிலவின் மேற்பரப்பு பகுதிகளும், விண்கலத்தின் சில பகுதிகளும் தெளிவாக தெரிகின்றன. அதிலும் நிலவின் மேற்பரப்பு பகுதி மிக அழகாக காட்சியளிப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

சந்திரயான்-3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் சந்திரயான்-3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் சுற்றி வர இருக்கிறது. ஏற்கனவே கணிந்துள்ளபடி, வருகிற 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்கலம் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்ய இஸ்ரோ முயற்சி செய்ய உள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியதும், விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் ‘பிரக்யான்’ என்ற 6 சக்கர ரோபோ வாகனம், நிலவின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை வழங்கும்.