சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சம்மன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 29 ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கும் மேல் அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த மே மாதம் 22 ஆம் தேதி 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்து இருந்தது. அதன்பிறகு கடந்த 5 ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி சி விஜயபாஸ்கர் ஆஜர் ஆனதாக தெரிகிறது.

இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.