பாண்டியன் செங்கோல் எரிந்த கதை தெரியுமா?: கனிமொழி!

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் இணைந்து கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி பேசியதாவது:-

இந்த சுதந்திரம் நம் மீது பெரும் பொறுப்புகளை எறிந்துவிட்டு சென்றுள்ளது. ஏதேனும் தவறு நேர்ந்தால் இதற்கு பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் காரணமாகமாட்டார்கள் என்ற டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் கருத்துடன் இந்த பேச்சை தொடங்குகிறேன்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்திய கூட்டணி சார்பிலும் நான் சார்ந்துள்ள திமுக சார்பிலும் ஆதரிக்கிறேன். இந்த அரசு மணிப்பூரில் இரட்டை இஞ்சின் ஆட்சி நடந்து வருவதாக பெருமையுடன் கூறுகிறது. ஆனால் இந்த இரட்டை இஞ்சின் அரசு அம்மாநில மக்களுக்கு எதிரான இரட்டை ஆயுதமாக மாறி உள்ளது. இரட்டை பேரழிவாகவும் இரட்டை பிளவாகவும் மணிப்பூர் மாறி உள்ளது. தனது வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் அரிதாக பிரதமர் மோடி ஊடகங்களை சந்தித்தார். ஆனால் நாடாளுமன்றத்திற்குள் வந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச மறந்துவிட்டார்.

“ஜனநாயகம் என்பது நாடாளுமன்ற கட்டத்தின் அழகால் வரையறுக்கவில்லை. விவாதங்களின் தரத்தாலும் தேசிய பிரச்னைகளில் ஒருமித்த குரலில் பேசும் குரலாலும்தான் சிறப்பு அடைகிறது” என மூத்த அரசியல் தலைவர் ஜஸ்வந்த் சின்ஹா நேற்று முன் தினம் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில் கூறி உள்ளார்.

மணிப்பூரில் 170 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கோனோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நடக்கும் வன்முறையை இந்த இரட்டை இஞ்சின் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எந்த உதவியும் செய்யவில்லை. மணிப்பூரில் நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அவலநிலையில் வசிக்கின்றனர். முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பசி மற்றும் அச்சத்தின் காரணமாக அழுது கொண்டிருக்கின்றனர். உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மணிப்பூரில் மக்கள் தவித்தனர். முதலமைச்சரோ, பிரதமரோ ஏன் எங்களை காண வரவில்லை என மணிப்பூரில் முகாமில் இருந்த சிறுமி கேட்டாள். எல்லாவற்றையும் இழந்த மக்களை அணுக கூட நீங்கள் நினைக்கவில்லை.

மணிப்பூர் மக்களின் கண்களில் நாங்கள் துயரத்தை மட்டுமே கண்டோம். மணிப்பூர் விவகாரத்தில் பாஜக விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்?. மணிப்பூர் மக்களை பிரதமர் நேரில் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். மணிப்பூர் மக்களை மத்திய, மாநில அரசுகள் சந்தித்து நீதி வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்க வேண்டும். அரசு மக்களுடன் துணை நிற்கிறதா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

காவல்துறையினர் அதிகமாக இருந்தும் மணிப்பூரில் வன்முறையை தடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ‘டபுள் இன்ஜின்’ அரசு என பெருமை பேசும் பாஜக மணிப்பூர் விவகாரத்தில் விளக்கம் தராதது ஏன்?.

சோழர் மரபு என்று சொல்லி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பெரும் ஆடம்பரத்துடன் செங்கோல் வைத்தீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாக தெரியாது. பாண்டியன் செங்கோலை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சாமானியர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதால் பாண்டியனின் செங்கோல் எரிந்த கண்ணகி குறித்த கதை உங்களுக்கு தெரியுமா? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும்.

ஒடிசா ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஒடிசா ரயில் விபத்தில் இறந்த சிலரது சடலங்கள் இன்னும் உரிமை கோரப்படாமல் உள்ளன. ரயில்வே துறையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. நாட்டில் ஏராளமானோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமே இல்லை.

25,593 எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இதுதான் நீங்கள் பெருமையுடன் சொல்லும் இந்தியாவா? மாற்றுத்திறனாளிகளுக்காக பாஜக அரசு வழங்கும் உதவித் தொகை ரூ.300-க்கு ஒரு கிலோ தக்காளிதான் கிடைக்கும். இந்தியா உங்களுக்கு மிக விரைவில் பாடத்தை கற்றுக்கொடுக்கும். இவ்வாறு கனிமொழி ஆவேசமாக பேசினார்.