கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு இன்று இயற்கை எய்தினார்!

பிரபல கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. புலவர் செ. இராசுவுக்கு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு உடல் நலக்குறைவு காரணமாக இன்று புதன்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. மறைந்த கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு, தமிழக அரசின் தொல்லியல் துறையில் பணிபுரிந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டு தொல்லியல் துறை தலைமை பொறுப்பு வகித்தபோது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். பேரூராதீன புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.

புலவர் ராசு உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு அவர் உயிரிழந்தார். மறைந்த புலவர் ராசுவுக்கு கவுரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

புலவர் செ. இராசு, ஈரோடும் மாவட்டம் சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்பை திருப்பூரிலும், முதுநிலை பட்டப் படிப்பை சென்னை பல்கலைகழகத்திலும் முடித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைகழக்த்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்றார். 1959இல் ஈரோட்டில் தமிழ் ஆசிரியராக பணியை தொடங்கிய செ. இராசு, 1980 முதல் 1982 வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.

பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு, தொல்லியல் துறையில் தலைவராக பொறுப்பேற்றார். கல்வெட்டு, செப்பேடு, சுவடி போன்றவை பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக சென்று அவற்றை ஆய்வு செய்து செய்தியாகவும், கட்டுரையாகவும், நூலாகவும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டறிந்து உலகுக்கு வெளிபடுத்தியுள்ளார். இந்தியாவில் வெளிப்படுத்தப்பட்ட முதல் இசை கல்வெட்டாக இது அமைந்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகுக்கு பல அரிய வரலாற்று தகவல்களை அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும் அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது.

அவருடைய இழப்பு தொல்லியல் மற்றும் வரலாற்று துறைக்கு மட்டுமன்றி வருங்கால சந்ததியினருக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அய்யா அவர்களின் மறைவுக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.