நிதி அமைச்சரின் பேச்சு மெகா அண்டப்புளுகு: மா.சுப்பிரமணியன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை எனத் தெரிவித்தார். நிதி அமைச்சரின் இந்தப் பேச்சை அண்டப்புளுகு என விமர்சித்துள்ளார் மா.சுப்பிரமணியன்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 9 வயது மாணவி மீது சாலையில் சுற்றுத் திரிந்த மாடு ஒன்று முட்டித் தாக்கியது. இதனால் காயமடைந்த அந்த சிறுமி அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அந்த மாணவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக வழங்கி தொடர்ந்து கவனித்து வருகின்றனர். தலை, கை ஆகிய பகுதிகளில் அடிபட்டு உள்ளதை, சி.டி ஸ்கேன் எடுத்து பெரிய பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கண் அருகே இரத்தக் கசிவு இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நாடாளுமன்றத்தில் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் குறித்து சொன்ன பதில், உண்மைக்கு மாறானது. மத்திய நிதி அமைச்சராக இருப்பவர் இப்படி மக்களை குழப்பும் வகையில் பேசக்கூடாது. வாய் கூசாமல் பொய் பேசியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது மெகா அண்டப்புளுகு என்று சொல்வார்களே, அப்படியான புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர். மத்திய பாஜக அரசு கடந்த 2015ஆம் ஆண்டு 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அதில் உத்தர பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், பீகார், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசம் கோரக்பூரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. அசாம், ஜம்முவில் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இயங்கி வருகின்றன. பீகார் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரை நிலைமை நமக்கே தெரியும். 2017ல் ஜார்க்கண்டில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை, தெலுங்கானாவில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாம் இயங்கி வருகின்றன.

2022ல் மணிப்பூர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அறிவித்த மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, நிலம் ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் இன்று சொல்கிறார். ஆனால் 4 வருடங்களுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்? அப்படியானால் யாரை ஏமாற்ற அடிக்கல் நாட்டினீர்கள்? அடிக்கல் காட்டப்பட்ட இடம் என்பது ஆர்ஜிதம் செய்யப்பட வேண்டிய இடமே அல்ல. அது அந்த மாவட்ட நிர்வாகத்தின் வசமிருந்த இடம். அதனை மத்திய அரசுக்கு மாற்றிக் கொடுத்த பின்னர் தான், பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு பின், மத்திய அரசின் குழுவினர் வந்து ஆய்வு செய்து, 15 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. அது 2021ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே நடந்தது.

மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான நிலத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசுக்கு மாற்றியதற்கான கோப்புகளை அடிக்கல் நாட்டு விழா நடந்த பின்னர், கடந்த 2020 நவம்பர் 3 அன்று டெல்லிக்கு சென்று மத்திய அரசின் உரிய அலுவலர்களிடம் அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதெல்லாம் தெரியாமல் நிதி அமைச்சர் இவ்வாறு பேசி உள்ளார். இப்படி தவறான தகவலை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது என்பது மிகவும் மோசமானது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசே முழு நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மட்டும் ஜப்பான் நிதியை நாடிச் செல்வது ஏன்? மற்ற மாநிலங்களை விட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நிதி தேவை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் கூறி உள்ளார். அதையெல்லாம் காலதாமதம் ஆனதற்கு காரணமாக சொல்கிறார். ஆனால் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஆயிரம் படுக்கைகளுடன் ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடித்து உள்ளோம். இன்று அது செயல்பாட்டிற்கே வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.