போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: நாராயணன் திருப்பதி!

திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், இதுவரை அவரை கைது செய்யாதது ஏன் என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக காவல்துறை தலைவரின் கவனத்திற்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தமிழ் துறை தலைவர் பாலமுருகன் என்பவர் மீது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் கடந்த 28/07/2023 அன்று அளித்த புகாரையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எண் 09/2023 படி வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இது வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது, அதிர்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் காவல்துறையின் கடமை. மேலும், ஏற்கனவே இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஈடுபட்டு வந்துள்ளது முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகையால், மேலும், மாணவிகளுக்கு தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் நிகழாவண்ணம், குற்றச் செயல்கள் நடைபெறாது தடுக்க வேண்டியது தமிழக காவல் துறையின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.