சாட்சி இருக்கும் போது முதல்வர் பொய் பேசலாமா: டிடிவி தினகரன்

1989 இல் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து செய்திகளும் புகைப்படங்களும் அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது திரௌபதியை போல் மணிப்பூர் பெண்கள் துகிலுறியப்படுகிறார்கள் என கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 இல் தமிழக சட்டசபையில் என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளார். அன்றைய தினம் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த திமுகவினர் அவரை பார்த்து சிரித்தனர். இவர்கள் திரௌபதி குறித்து பேசுகிறார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் இதை முதல்வர் ஸ்டாலின் மறுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் ஏதோ வாட்ஸ் ஆப் வரலாற்றை படித்துவிட்டு பேசுகிறார். ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 1989ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே! மாண்புமிகு அம்மா அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டி அ.தி.மு.க. என ஆரம்பித்து வெளியேறிய திரு.திருநாவுக்கரசு அவர்கள் சொன்னதாக வெளியான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மா அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும்.

1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு திரு.ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல. அம்மா அவர்கள் உயிருடன் இருந்தவரையில் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஏன் அவரது தந்தை மறைந்த திரு.கருணாநிதி கூட இந்த சம்பவத்தை மறுத்தது இல்லை. ஆனால் அம்மா அவர்கள் உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல. இவ்வாறு டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.