தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கர்நாடகாவானது தமிழ்நாட்டுக்கு 53 டிஎம்சி தண்ணீரை திறந்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை 15 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக திறந்துள்ளது. கர்நாடகம் தர வேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் உரிய தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தர கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடக் கூடாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார். அதில் ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து 243 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணையில் 69 டிஎம்சி, பவானி சாகர் அணையில் 16 டிஎம்சி தண்ணீர் உள்ளது. பிலிகுண்டுலுவிலும் 83 டிஎம்சி தண்ணீர் இந்த ஆண்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும் காவிரி பாசன விவசாயத்திற்கும் போதுமானதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பீர்கள் என நம்புவதாக சித்தராமையாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.