நீட்டை எதிர்த்து மூச்சு விட கூட துணிவில்லாத கட்சி அதிமுக: உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விட கூட துணிச்சல் இல்லாத கட்சி அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த சோகத்தில் அவனது தந்தையும் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் நீட் தேர்வு குறித்த விவாதத்தை பெருமளவில் எழுப்பியுள்ளது. குறிப்பாக, இறந்து போன மாணவன் விக்னேஸ்வரனின் நண்பனான ஃபயாஸ்தீன், அமைச்சர் உதயநிதியை மறித்து கேட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சூழலில், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் வரும் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே, திமுகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் காதில் பூ சுற்றும் நாடகம் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் .

இந்நிலையில், அதிமுகவின் இந்த விமர்சனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஜெயக்குமார் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போறாரு. அவர் கையில பூ வச்சிருக்காரு. அவரு சுத்தட்டும். நாங்க (திமுக) நீட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிச்சுட்டுதான் இருக்கோம். ஒன்னே ஒன்னு கேக்குறேன். ஆளுநர் உங்க கூட்டணி கட்சியான பாஜகவின் பிரதிநிதி தானே. அவர் ஒரு பெற்றோரிடமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாதுனு இப்போ சொன்னார்ல. அதுக்கு அதிமுக இதுவரை ஒரு கண்டனமாவது தெரிவித்ததா? ஆளுநரை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ மூச்சு விட கூட துணிச்சல் இல்லாதவர்கள்தான் அதிமுகவினர்” என உதயநிதி கூறினார்.