விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை: அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து அமலாக்கத்துறை பரபரப்பான தகவல்களை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சுவலியால் அவர் துடித்த நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு பழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை முதன்மை நீதிமன்றம் மூலம் கடந்த 7 ம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் வழக்கு எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து இன்று சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இன்று பரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் ‘கேஷ் ஃபார் ஜாப்ஸ் ஸ்கேம்’ தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி வழக்கு தாக்கல் செய்ய்பப்டடுள்ளது. இதனை நேற்று (16ம் தேதி) சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் அமலாக்கத்துறை எப்படி நுழைந்தது என்றால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் தொடர்பாக 3 வழக்குகளை பதிவு செய்து மெயின் குற்றவாளியான செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் இந்த வழக்கை தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தவும், கூடுதல் குற்றப்பத்திரிகையை 2மாதத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் 16.05.2023 அன்று உத்தரவிட்டது. அதோடு 01.09.2022ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கைவிடப்பட்ட விசாரணையை மேற்கொண்டு தொடரவும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுத்தியது. அதன்படி அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி தனது தம்பி அசோக் குமார் மற்றும் தனி உதவியாளர்கள் பி.சண்முகம், எம் கார்த்திகேயன் ஆகியோருடன் சேர்ந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் அப்போதைய அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் குற்றச்சதியில் ஈடுபட்டு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஜூனியர் டிரெட்ஸ்மென், ஜூனியர் அசிஸ்டென்ட்ஸ், ஜூனியர் என்ஜினீயர், உதவி என்ஜினீயர் உள்ளிட்டவர்களை பணிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பலன்களை பெற்றுள்ளார். இதுதொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின்போது வங்கி கணக்கு விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோரின் வங்கி கணக்குகளில் பணங்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதோடு இந்த பணத்தை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை சேகரித்துள்ளது. அதனை ‘கேஷ் ஃபார் ஜாப்ஸ் ஸ்கேம்’ உடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டபோது இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்ததோடு உரிய விளக்கங்களை அளிக்காமல் இருந்தார். இதன்மூலம் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த அறிக்கையால் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா மற்றும் தம்பி அசோக் குமார் உள்பட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விபரம் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.