இந்தியா கூட்டணிக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது: குமாரசாமி

இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அன்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்திலிருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியிலிருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த 10 நாள்களாக தமிழகத்துக்கு தினசரி வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக கர்நாடக அணைகளிலிருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை ஆளும் கட்சியை திருப்திப்படுத்தவும், இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது. காங்கிரஸ் பெரிய நாடகத்தை உருவாக்கி கர்நாடக மக்களை முட்டாளாக்கியுள்ளது.

பெங்களூரு நகரம் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றது. கர்நாடகத்தின் நிலைமையை ஏன் காங்கிரஸ் அரசால் உச்சநீதிமன்றத்திற்கு விளக்கப்படவில்லை? சட்ட வல்லுநர்களுடனும், எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்காமல் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீரை விடுவித்ததன் மூலம் என்ன ரகசியம்? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீர்வள அமைச்சராக இருக்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடகத்தின் அமைச்சரா அல்லது தமிழ்நாட்டுக்கான அமைச்சரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். நீர்த்தேக்கத்தின் சாவி மத்திய அரசிடம் உள்ளன என்று குறிப்பிடுவதன் அர்த்தம் என்ன? அப்போது அவருக்கு என்ன பொறுப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.