நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்: எல்.முருகன்!

அரசை இயக்கத் தெரியாத நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

நீட் விவகாரம், இந்தி மொழி, எய்ம்ஸ், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு என மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜி கைது நடந்தபோதே இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதற்கும் பயப்படமாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை திமுகவை விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர், தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என திமுக தலைவர் பேசியதாக கடுமையாக விமர்சித்தார். கச்சத்தீவு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில்தான் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற மீனவர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்னும் அதிகமாகியுள்ளது. ஒரு மீனவன் கூட இலங்கை கடற்படையால் துன்பப்படமாட்டார் என 2014 தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரது ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கவே செய்கிறது என்றால் மோடி ஆட்சி பலவீனமான ஆட்சி என்றுதானே அர்த்தம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் மீனவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பதிலளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசை இயக்கத் தெரியாத நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி முடங்கிக் கிடப்பதற்கு முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைதான் காரணம். மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொள்ளாமல் தமிழகத்திற்கு அநீதியை இழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தி அரசுதான் என்பது நம் அனைவருக்கும் தெரியும் எனவும், கச்சத்தீவு விவகாரமாக இருந்தாலும் மற்ற விவகாரமாக இருந்தாலும் தமிழகத்தின் நலன் குறித்து ஸ்டாலின் யோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.