தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தவிர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை.

இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழக மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிறது. மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருள்களையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்திடும் வகையில் உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகின்றன. அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு வலியுறுத்தியுள்ளார்.