ஓட்டப்பந்தயத்தின்போது 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அங்கு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார். மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.