பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும்: ஆளுநர் பன்வாரிலால்!

பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்ய நேரிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் பன்வாரிலால். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் பன்வாரிலால். பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர், பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகும் பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் பன்வாரிலால் புரோஹித். சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதுகுறித்து விளக்கம் கேட்டு முதல்வருக்கு கடிதம் அனுப்பினார் ஆளுநர். ஆனால், முதல்வர் பகவந்த் மான் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து புகைச்சல் நீடித்து வந்தது.

கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையை கூட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதையடுத்து ஆளுநரின் இந்தப் போக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது, அமைச்சரவை முடிவின் படி சட்டசபையை கூட்ட வேண்டியது ஆளுநர் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆளுநர், சட்டசபை கூட்ட அழைப்பு விடுத்தார். கடந்த ஜூன் மாதம் ஆம் பஞ்சாப் மாநில சட்டசபையில், ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தராக இனி மாநில முதல்வர் பதவி வகிக்க வகை செய்யும் சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் – ஆளுநர் இடையே அதிகார மோதல் நிலவி வரும் சூழலில் தான், தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அப்படி பதில் அளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன் என்றும் எச்சரித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். மேலும், தனது கடிதத்திற்கு பதிலளிக்காததன் மூலம் அரசமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு முன் பல்வேறு கடிதங்கள் எழுதியும் பதில் வராததால் அதிருப்தி அடைந்துள்ள பஞ்சாப் ஆளுநர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விளக்கம் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்ததார். அந்த கடிதத்திற்கும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதில் கடிதம் அனுப்பவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே, என் கடிதங்களுக்கு முறையாக பதில் அளிக்காவிடில் முதலமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன் எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நெறிமுறையின் தோல்வி குறித்து 356வது பிரிவின் கீழ் இந்திய ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவது மற்றும் ஐபிசி பிரிவு 124ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன், எனக்கு பதில் அனுப்ப வேண்டும். மேலும் மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்சனை தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் பதில் அளிக்க வேண்டும். தவறினால் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.