திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்: ஜெயக்குமார்!

நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை மறைத்து முதல்வரின் காலை உணவுத்திட்டம் குறித்த பதாகைகள் முன்னிலை படுத்தப்படுவதாக கூறி சென்னை மாநகாட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான். சென்னையில் உள்ள 358 அங்கன்வாடி மையங்களில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் என எழுதுகிறார்கள். உங்கள் படத்தை வைத்துக்கொள்வதில் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஏன் எங்கள் தலைவரின் படத்தை மறைக்கிறீர்கள்?

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு காலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது நியாயமில்லை. எங்கள் தலைவரின் படத்தை மறைத்தால் அது சட்டவிரோதம். அழிக்கப்பட்ட படத்தை மீண்டும் வரைய வேண்டும். இல்லையெனில் நாங்கள் எழுதி வைக்க வேண்டிய நிலை வரும். அந்த நிலைக்கு எங்களை ஆளாக்காதீர்கள்.

இந்த அரசு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கி, தலைக்குணியும் நிலையில் உள்ளது. கட்சி ஆட்கள் தவறு செய்தால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல், ஊக்கப்படுத்துகிறார். கட்சி ஆட்களை அடக்கி வைக்காததால், அவிழ்த்துவிட்ட மாடுகளை போல் மெய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதற்காக குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் எடுக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறுகிறார்.