அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது: ராகுல் காந்தி கேள்வி!

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிதாக வந்தள்ள செய்திகளை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதானி குழுமத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை 2 பிரபல பத்திரிகைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது. அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்?.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிகாட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும்; இது எப்படி?. இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது. அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது; ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது. இது தேசிய பாதுகாப்பு பிரச்சினை, தேசிய பாதுகாப்பு துறையிலும், அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் சொத்துக்களை வாங்க அதானிக்கு எப்படி பணம் வருகிறது?. அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது?. நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அதானி முறையீடு குறித்து கேள்வி எழுப்புவேன். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, பிரதமரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.