பொன்முடி வழக்கில் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

பொன்முடி வழக்குகள் விவகாரத்தில் அவரை விடாமல் துரத்தும் ஜெயக்குமார், தற்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் 1996 முதல் 2001 வரை மு.கருணாநிதி தலைமையிலான அரசில் பொன்முடி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

2002ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருந்து வந்தது. கடந்த ஜூன் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பளித்த வேலூர் நீதிமன்றம், பொன்முடி தரப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விடுவித்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். விசாரணை மிக மோசமான முறையில் நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இவ்வழக்கு விசாரணையின் போது, “நீதிபதி வழக்கை விசாரிக்காமல் முன்முடிவுக்கு வந்தது போல உள்ளது” என குற்றம்சாட்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் தானே விசாரிப்பேன் என கறார் காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், வேண்டுமானால் உச்சநீதிமன்றம் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, சொத்து குவிப்பு வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்தது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் வரம்பு மீறப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இவ்வழக்கை விரைவில் விசாரணை வர வைக்கும் முயற்சிகளில் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனுதாக்கல் செய்தார். அதில், பொன்முடிக்கு எதிரான வழக்கில் தங்களது தரப்பின் கருத்துக்களை கேட்காமல் எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் மறு விசாரணைக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்பதால் அவ்வழக்குகளுக்கும் ஜெயக்குமார் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அரசுக்கு உதவி செய்வதாக கூறி தாமாக முன்வந்து ஜெயக்குமார் இணைந்துகொண்டுள்ளார். இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்திலும் நேரில் ஆஜரானார். இப்போது, பொன்முடிக்கு எதிரான மற்றொரு வழக்கிலும் தனது கருத்தை கேட்க வேண்டும் என கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.