கூட்டணி எல்லாம் முடிஞ்சு போச்சு: வானதி சீனிவாசன்

அதிமுக – பாஜக கூட்டணி நீடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு தடாலடியாக பதில் கூறியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜகவினர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனும் கலந்துகொண்டு நிர்மலா சீதாராமனை வழியனுப்பி வைத்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார், அவரது கோரிக்கையும் கேட்கபட்டது” எனத் தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்த கேள்விக்கு, “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்சனைகளுக்காக நிதி அமைச்சரை சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு வந்து மத்திய அமைச்சரை சந்தித்து தென்னை பிரச்சனை குறித்து பேசி இருக்கின்றனர்.” என பதில் அளித்தார்.

மேலும் பேசிய வானதி சீனிவாசன், “கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே சொன்னது போல தேசிய தலைமை முடிவு செய்யும். நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை. நேற்று முழுக்க நான் போனையே எடுக்க முடியவில்லை. மாநிலத் தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம்” எனத் தெரிவித்தார்.

அப்போது அதிமுக உடனான கூட்டணி குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, “எல்லாம் முடிஞ்சு போச்சு” என பதில் அளித்துவிட்டுச் சென்றார். திமுக பாஜக இடையே கூட்டணி நீடிக்கும், அதற்குத்தான் பெரியவர்கள் பேசி வருகிறார்கள் என பாஜக துணைத் தலைவர் வி பி துரைசாமி நேற்று கூறி இருந்த நிலையில் எல்லாம் முடிஞ்சு போச்சு என கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு வழிபாட்டுச் சுதந்திர வேண்டும்; மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோயில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? என தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நேற்று (3-10-2023) நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், “தென் பாரதத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்து கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள் சூறையாடப்படுகின்றன. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை தமிழ்நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை” என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு இந்துக்களின் மிகமிக முக்கியமான பிரச்னை குறித்து அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பிரதமர் பதிவு செய்திருக்கிறார். இதனால், யாரும் கண்டுகொள்ளாத தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்னை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால், மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை அந்தந்த மதத்தினரே நிர்வகின்றனர். அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் அந்தந்த மதத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்து கோயில்களை மட்டும் நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில், மக்களுக்கு இந்து ஆன்மிக கல்வி கூட அளிப்பதில்லை. விநாயகர் சதுர்த்திக்கு கூட ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து தடுக்கப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தில்லை தீட்சிதர்களின் நிர்வாகத்தில் இருந்து சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை, தன் கட்டுக்குள் கொண்டுவர, திமுக அரசு முயற்சிக்கிறது.
வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. மதச்சார்பற்ற அரசுக்கு மத விவகாரங்களில், கோயில் நிர்வாகங்களில் தலையிட உரிமை இல்லை. ஆனால், அனைத்தையும் மீறி, இந்து கோயில்களை மட்டும் ஆக்கிரமித்துள்ளது திமுக அரசு. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடம் கோயில்கள் இருப்பதால், அவை எப்படி நிர்வகிக்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிக வருமானம் வரும், அதிக சொத்துக்களை கொண்ட கோயில்களில் மட்டுமே திமுக அரசு கவனம் செலுத்துகிறது. சிதிலமடைந்து கிடக்கும் ஆயிரமாண்டு கோயில்கள் கூட சீரமைக்கப்படுவதில்லை.

கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகை வந்தாலே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை போல ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவமனை, ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு மேல்நிலைப் பள்ளி நடத்த முடியும். ஆனால், கோயில் சொத்துக்களில் இருந்து வர வேண்டிய வாடகை, குத்தகையை வசூலிக்கவோ, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மீட்கவோ கோயில்களை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில்களை, இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த உண்மையைத்தான் நிஜாமாபாத்தில் பிரதமர் மோடி அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, மதச்சார்பின்மையை காக்க, இந்து கோயில்களில் அரசு வெளியேற வேண்டும். இந்துக்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் அளிக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.