மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க: அண்ணாமலை!

மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரியாக்ட் செய்துள்ளார். முதல்வரின் அக்கறை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு காரணமாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கடிதததைக் குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சந்தேகம் எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவை பகிர்ந்து, அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டிற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியவர் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி என்பதை நினைவூட்டியிருக்கும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துகிறோம். கடந்த ஆண்டு, திமுக எம்.பி., டிஆர் பாலு, தமிழ்நாடு 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றதாகக் கூச்சலிட்டார். தி.மு.க 6-வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தும், வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளது. இது தான் உங்கள் சாதனை. தயவுசெய்து முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி, தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு திமுகவின் பங்களிப்பு மிகக் குறைவு. இதில் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினின் பங்களிப்பு என்பது சமீபத்தில் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் தனியார் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தது மட்டுமே. தமிழக முதல்வரின் இந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை, மற்ற திமுக அமைச்சர்களும் புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு தனது கடந்த கால பெருமைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.