காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான்: ஜெயக்குமார்!

“காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என போட திமுகவுக்கு துப்பில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு என்றால் அதிமுகதான் என்பதை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் உணர்ந்து உள்ளார்கள். இஸ்லாமிய அமைப்புகள் எங்களை சந்தித்துள்ளனர். திமுகவின் தூண்டுகோளாக சில குரல்கள் உள்ளது. கண்டிப்பாக அது எடுபடாது. சிறுபான்மையினர் வாக்குகள் என்பது கண்டிப்பாக அதிமுகவுக்கு கிடைக்கும். அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். திமுக ஆட்சியில் உதட்டில் தேனை தடவிவிட்டு சென்றுவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்கள் திமுக ஆட்சியில் ஏற்றம் பெறுவார்கள் என்றார்கள், ஆனால் என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். சர்வாதிகாரியாக கூட்டணி கட்சிகளை தான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என சொல்லி இருந்தார். இப்போது எல்லோரும் தலைத்தூக்கிவிட்டார்கள்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல் டிவி விவாதங்களில் கலந்து கொண்டதை போல் சபாநாயகர் அப்பாவு பேசி வருகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேசினால் மைக் ஆப் செய்யப்படுகிறது. சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடுமா? காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என போட திமுகவுக்கு துப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.