கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்: சீமான்

கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் போது முதலில் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதே நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கருத்தை கூறியுள்ளார். ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று சீமான் கேட்டுள்ளார். நான் இதை சொல்றதுக்கு ரொம்ப வருத்தப்படுகிறேன். நாம் வணங்கும் தெய்வங்களை கழிவறைகளுக்கு மட்டும்தான் இன்னும் இவனுங்க கூட்டிட்டு வரல. கோயில் ஒரு புனிதமான ஒரு வழிபாட்டு தலம். தெய்வம் அங்கே இருக்கு. நாம போறோம்.. வழிபடுறோம்.. வர்றோம். எதுக்கு நீ கடவுளை வீதிக்கு தூக்கிட்டு வர்ற? எதுக்கு சாலையில வெச்ச? அப்புறம் எதுக்கு தூக்கி தண்ணிக்குள்ள போடுற? கிரிக்கெட் மைதானத்தை எதுக்கு உடுக்கை மாதிரியும், விளக்கு கம்பங்களை சூலம் மாதிரியும் அமைக்குற? அங்க உட்காந்துட்டு நீ ஜெய் ஸ்ரீராம்னு கோஷம் போடுற? என்றார்.

நாளைக்கு ஒரு முஸ்லிம் நாட்டுக்கு போய் நீ விளையாடுறனு வெச்சுக்குவோம். அவன் என்ன பண்ணுவான். அல்லா ஹு அக்பர்னு கோஷம் போடுவான். இதுலாம் ரொம்ப கொடுமையான விஷயம். நான் கேக்குறேன்.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? என்றார்.

பாகிஸ்தான்காரனை நீ பகையாளினு சொல்றியே. உனக்கு அப்படி சொல்ல என்ன அருகதை இருக்கு? இந்த நாடு பிரிட்டிஷ்காரனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் போது, நம்ம விடுதலைக்காக போராடுனுவன் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருந்த இஸ்லாமியன். போராடாத ஆர்எஸ்எஸ் காரனும், பாஜக காரனும் தான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்துலேயும் இன்னைக்கு உட்கார்ந்துட்டு இருந்தான். உனக்கு நாட்டுப் பற்று பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா? இன்னைக்கு பிரிட்டிஷ்காரன் உனக்கு நண்பன் ஆயிட்டான். உன் மண்ணின் விடுதலைக்காக போராடிய பாகிஸ்தான் உனக்கு பகையாளி ஆயிட்டானா? நீ பெத்துப்போட்ட குழந்தை தான் பாகிஸ்தான். அவனும், நீயும் சேர்ந்து பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை தான் பங்களாதேஷ். இன்னைக்கு அவங்க உனக்கு எதிரி ஆயிட்டாங்களா? என்னுடைய மீனவன் 850 பேரை சுட்டுக்கொன்ற இலங்கை, உனக்கு நட்பு நாடாக இருக்கு. ஆனால், பாகிஸ்தானும், பங்களாதேஷும் உனக்கு பகை நாடாக மாறிடுச்சு.. அப்படிதானே? இப்படி சொல்லுறவன் பைத்தியமா இல்லையா.. முத்துன பைத்தியம் யாருக்கும் தொந்தரவு கொடுக்காது. ஆனால், இந்த அரை பைத்தியங்கள்தான் வர்றவன் போறவனயெல்லாம் சீண்டிட்டு இருக்கும். இதுங்க பூரா அரை பைத்தியங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.