பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு மக்கள் போராட்டம்!

சிவகாசி அருகே ரெங்கபாளையத்தில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அழகாபுரியை சேர்ந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் இன்று காலை முதல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அருகே உள்ள கணிஷ்கர் பட்டாசு கடையில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி அழகாபுரி சாலையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் சிவி கணேசன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களை பெறுவோம், அதுவரை அறவழியில் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.