ஓசூர், ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்: வாட்டாள் நாகராஜ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பரபரப்பாக பேசியுள்ளார்.

தமிழ்நாடு -கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் இந்த ஆண்டு பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகாவில் போதிய மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தர மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நாடியது. இதில் தமிழகத்துக்கு சாதகமான உத்தரவுகள் வந்தன. இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்து வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் தொடர்ந்து பந்த் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தான் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றார். இதற்காக பெங்களூரில் இருந்து அத்திப்பள்ளியை கடந்து தமிழகத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த வேளையில் வாட்டாள் நாகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஓசூர் மற்றும் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

ஓசூர் கர்நாடகாவுக்கு சேர வேண்டும். ஓசூர் கர்நாடகாவுக்கானது. ஊட்டி கர்நாடகாவுக்கானது. இது உறுதி. இதிகாச ஆவணம் இது. காமராஜ் நாடார் காலத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டதால் ஓசூர் தமிழகத்துக்கு சேர்ந்துவிட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் புறசபை முன்பு நான் சத்தியாகிரஹம் நடத்தினேன். ஓசூர் கர்நாடகாவுக்கு சேர வேண்டும் என கூறினேன். அப்போது கன்னடா தெரிந்த எம்எல்ஏ ஒருவர் இருந்தார். அவர் கன்னடத்திலேயே பேசினார். அவர் எனது கோரிக்கையை ஒப்புக்கொண்டார். ஓசூர் கர்நாடகாவுடன் சேர்வது நல்லது. மேலும் பெங்களூருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பிரதேசமாக ஓசூர் கர்நாடகாவுடன் சேருவது நல்லது என கூறினார். அதோடு ஓசூர் தமிழ்நாட்டுக்கு சொந்தமானது எனக்கூறுவது சரியானது அல்ல. ஓசூரை சுற்றி இருக்கும் மக்கள் 100க்கு 100க்கு அனைவரும் கன்னடர்கள்.

தமிழ்நாட்டினர் தண்ணீர் கேட்பதை நிறுத்த வேண்டும். அரசியல் செய்கின்றனர். பிலிகுண்டுலுவில் நீர் உள்ளது. தமிழ்நாட்டில் தண்ணீர் இருக்கிறது. விவசாயம் செழித்து வளர்கிறது. கணக்கு இல்லாத அளவுக்கு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. ஆனாலும் அரசியலுக்காக தண்ணீர் கேட்கின்றனர். மேலும் என்னை பற்றி தவறாக பேசுகின்றனர். எச்சரிக்கை கொடுக்கிறேன். கன்னட அமைப்பினர், வாட்டாள் நாகராஜ் பற்றி தவறாக பேசவேண்டாம். அரசியல் ரீதியாக பேசலாம். தவறில்லை. ஆனால் என்னை பற்றி கீழ்த்தரமாக கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள். நான் 3 , 4 வீடியோ பார்த்தேன். கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர். அப்படி பேசியவரின் பெயரை நான் கூறினால் அவர் பெரிய மனுஷனாக ஆகிவிடுவார். அதனால் அவரை பற்றி பேசவில்லை. என்னை பொறுத்தவரை கர்நாடகாவில் இருந்து தமிழக அரசு தண்ணீர் கேட்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.