வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது: ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையை வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மட்டுமே எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில், தற்போது இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்ப துவங்கிவிட்டது. நீட் பயிற்சி பெறும் மாணவர்களும், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது வட மாநிலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலும் மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு முட்டையை தூக்கி மக்களிடம் காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை சுட்டிக்காட்டி செங்கல்லை தூக்கிக் காட்டி உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முட்டை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலுக்கு முன்னாடி ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் என்ன சொன்னாங்க? நாங்க ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்திலேயே நீட்டை ஒழிப்போம்னு சொன்னாங்களா இல்லையா? இப்போ பண்ண வேண்டியது தானே. பொய் சொல்லி ஓட்டு வாங்கிட்டு இப்போ என்ன நடிக்கிறீங்க? நீட்டை கொண்டு வந்தது மட்டும் இல்லாம, அதை ஒழிப்போம்னு மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி பண்ணிட்டு இருக்கீங்க. பண்றத எல்லாம் பண்ணிட்டு இப்போ முட்டை எடுத்துட்டு உதயநிதி சுத்தி வர்றாரு. முட்டையை (மதிப்பெண்) யாரு எடுப்பா.. கூமுட்டை தான் முட்டையை எடுக்கும். வர தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகுதுன்றத சொல்லாம சொல்றாரு போலிருக்கு” என ஜெயக்குமார் கூறினார்.