ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடத்தப்படும்: ஜவாஹிருல்லா

கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்குக் கோப்பு அனுப்பப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரும் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், செய்திகள் வருகின்றன. ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை தமுமுக சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். தமுமுக நடத்தவுள்ள ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக இதுபோன்ற சம்பவத்தை சமூகவிரோதிகள் சதி செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை மட்டும் கைது செய்யாமல் அவரது பின்னணியில் உள்ளவர்களையும் தமிழகக் காவல்துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இயங்கும் தமுமுக, தனது ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுக்கோப்புடன் திட்டமிட்டபடி அக்டோபர் 28 மாலை திட்டமிட்டப்படி நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.