தமிழகத்திற்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதியை நியமித்துள்ளன. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-ஆவது கூட்டம் டெல்லியில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் கூறும்போது, “கர்நாடகாவில் தற்போது மழை இல்லாததன் காரணமாக கர்நாடகாவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்க முடியாது என்று கர்நாடக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தப் பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு உத்தரவாக பிறப்பிக்கும். அந்த உத்தரவின்படி, தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே இறுதி உத்தரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.