தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்: அண்ணாமலை

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பரமத்தி வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய பண்ணை வீடுகளில் தனியாக தங்கி இருக்கும் வயதான தம்பதியரை கொன்றுவிட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மன்னிப்பே கிடையாது. பரமத்தி வேலூர் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் நடக்கும் முன்பாகவே அவற்றை தடுத்து நிறுத்த முடியும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி மீதும் காவல்துறை மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மாவட்ட ஆட்சியரின் பேச்சைக்கூட கேட்காமல் திமுகவினர் அராஜக போக்கில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு காவல்துறை, குற்றச் சம்பவங்கள் தடுக்கும் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் மக்கள் வளர்ச்சியை கருதாமல் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக தலைவரையும் அவரது மகனையும் குறித்து புகழ் பாடுவதிலேயே குறியாக உள்ளனர். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

உயர்கல்வி மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. வேந்தர் நியமித்தல், சித்தா பல்கலைக்கழகம் தனித் தேர்வு போன்ற உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால் தான் தமிழ்நாடு ஆளுநர் அவரது நிலைப்பாட்டில் உள்ளார். ஆளுநர், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் திமுக அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆதாயம் பெற இதுபோன்று நடக்கிறது. என் மீதும் வழக்கு தொடர பல அரசியல் நாடகங்களை திமுக நடத்தி வருகிறது.

அதேபோல தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் பதவிக்கான பணியிடங்களை நியமிக்கும் போது, வெளிப்படை தன்மையோடு அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சரும் பிற அமைச்சர்களும் தமிழக மக்களை குழப்பி வருகிறார்கள். இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அந்த கூட்டணியில் எந்த விதமான கொள்கை சம்பந்தங்களும் இல்லாத கட்சிகள் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீட்டில் காங்கிரஸும், திமுகவும் அரசியல் நாடகம் நடத்துவதை போலத்தான், இண்டியா கூட்டணியும் உள்ளது. கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள மோசமான நிறுவனம் டிஎன்பிஎஸ்சி தான். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதம் ஆகிவிட்டது. எனினும், இதுவரை 12 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வேலை தான் வழங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை 8.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு மோசடி நிறுவனம். எந்தவொரு பதவிக்கும் பணம் நிர்ணயிக்கப்படுகிறது.

தமிழகத்தை ஒரு டிராமா கம்பெனி போல் அரசு நடத்துகிறது. திரைத்துறை மட்டுமில்ல, தமிழகத்தில் அனைத்து துறைகளையும் முதல்வர் குடும்பத்தினரே கையில் வைத்துக் கொள்ள பார்க்கின்றனர். பிரதமரின் எந்த ஒரு நல்ல திட்டமானாலும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமே திமுக தலைமையிலான ஆட்சி. 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது இந்திய தாய் தலைகுணிந்து இருந்தார். அப்போது ரூ.12 லட்சம் கோடி கொள்ளை அடித்திருந்தனர். இந்த கொள்ளை கும்பலுக்கு தலைமை திமுக தான். இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியில் பிரிந்து வந்தவர்கள். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.