சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை என்று கெஜ்ரிவால் கூறினார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கெஜ்ரிவால் கூறியதாவது:-

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை. டெல்லியில், தினமும் என்னைக் கைது செய்வதாக மிரட்டுகிறார்கள். கெஜ்ரிவாலின் உடலைக் கைது செய்யலாம், ஆனால் அவரின் எண்ணங்களை நீங்கள் எப்படிக் கைது செய்வீர்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.