இலங்கை மலையகத்தமிழர் விழாவில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு

கொழும்புவில் மலையகத் தமிழர்கள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதில் நான் கலந்துகொள்ள இருந்தேன். இறுதி நிமிடம் வரை காத்திருந்தும், இலங்கைக்குச் செல்ல ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

இலங்கையில் மலையகத் தமிழர்கள் அங்கே குடியேறி தோட்டப்பணிகளில், தங்களை ஈடுபடுத்திக் கொண்ட 200வது ஆண்டு விழாவிற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அவர் செல்ல இயலாத நிலையில் அந்த விழாவிற்கு நான் செல்வதாக, முதலமைச்சர் அவர்களால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நானும் அங்கே செல்ல இயலாத நிலையில் இருப்பதாக கடந்த இருநாட்களாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதுகுறித்த விளக்கத்தினை அரசினுடைய சார்பில் நான் அளிக்க விரும்புகிறேன்.

நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, கடந்த 2ஆம் தேதி இலங்கையின் தலைநகரான கொழும்புவில் மலையகத் தமிழர்கள், அங்கே தோட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தங்களுடைய வாழ்வியலை இலங்கையின் மலை அடுக்குகளில் வாழத்தொடங்கி, அங்கே இருக்கக்கூடிய தோட்டங்களில் தங்களுடைய பணியினை, செய்து வருகின்றனர். அவர்கள் சென்றநாளை குறிக்கக்கூடிய வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசுக்கு விடுக்கப்பட்டது. அவர் கலந்து கொள்ள இயலாத நிலையில், அவருக்குப் பதிலாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள்.

அதனையொட்டி அந்த விழாவில் நான் கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய ஆயத்தமானேன். மேலும், முதலமைச்சர் அவர்களுக்கு பதிலாக நான் அங்கே வருகிறேன் என்பதை அங்கு இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களுக்கு முறைப்படி நாங்கள் தெரிவித்தோம். இதில் மிக முக்கியமாக, முதற்கட்டமாக, இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறுவதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. அதன்பிறகு, விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் தொடர்புகொண்டு என்னுடைய பயண விவரங்கள் எல்லாத்தையும் அவர்களுக்கு அளித்து பயணத்திற்கு வேண்டிய விமான டிக்கெட்டுகள் எல்லாத்தையும் ஏற்பாடுகளை செய்துவிட்டு, political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

28ஆம் தேதி அன்று பொதுத் துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு, அனுப்பப்பட்டது. விழா 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு ஒன்பது மணிவரை அதற்கான அனுமதி ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிடமிருந்து நமக்கு வரவில்லை. நான் அன்றைய தினம் ஏறத்தாழ எட்டு, எட்டரை மணிவரை தலைமைச்செயலகத்தில் தான் இருந்தேன். தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரியிடத்தில் அதற்கான ஒப்புதல் வந்துவிட்டதா? என்று விசாரித்தபோது இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

மறுநாள் காலை விமானத்தில் நான் கொழும்பு செல்வதற்கான பயணத் திட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு நான் அதிகாரிகளிடத்தில் கேட்டு, இதற்கு பிறகு அத்தகைய அனுமதி கடிதம் வருவது கடினம் என்ற சூழ்நிலையில், அதற்கு பின்பு நான் இலங்கையில் இருக்கக்கூடிய விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து, சூழ்நிலையை அவர்களிடத்தில் விளக்கி, ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நான் பயண ஏற்பாடுகளை எல்லாம் ரத்து செய்துவிட்ட காரணத்தினால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்தகைய அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துவிட்டு பயண ஏற்பாடுகளை எல்லாம் ரத்து செய்துவிட்டோம்.

2-ஆம் தேதி காலை சுமார் 11 மணிக்கு இலங்கையிலிருந்து நமது முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இதுபோல தமிழ்நாடு அமைச்சர் அவர்களும் வர இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தியினை அனுப்பிட வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சுமார் 11 மணிக்கு செய்தி கிடைத்த உடன் பல்வேறு அலுவல்களுக்கிடையே, இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருதி உடனடியாக முதலமைச்சர் அவர்கள் நேரம் ஒதுக்கி, அதற்கான வாழ்த்துச் செய்தியினையும் உடனடியாக தயார் செய்து அங்கு அனுப்பிவைத்துவிட்டார்கள். அந்த வாழ்த்துச் செய்தி இங்கிருந்து பகல் 2 மணிக்குள் அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அவர்கள் நம்மிடத்தில் தெரிவித்தது நிகழ்ச்சியில் முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பப்படும் (Video clipping) என்று சொன்னார்கள். அங்கே இருக்கக்கூடிய பல்வேறு செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் என்னவாயிற்றது என்றால், என்ன காரணத்தினாலோ முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி அந்தக் கூட்டத்தில் அவர்களால் ஒளிபரப்பப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டிலிருந்தும், இந்திய அளவிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்தினால் முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி அங்கே ஒளிபரப்ப இயலவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

அதற்கு என்ன காரணம் என்பதை பத்திரிகையாளர்களாகிய உங்கள் யூகத்திற்கு நான் விட்டுவிடுகிறேன். ஆனால் அதற்கு பிறகு முதலமைச்சர் அவர்களுடைய வாழ்த்துச்செய்தி பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளியே வந்திருக்கிறது. இதுதான் இந்த விஷயத்தில் நடந்தது என்பதை இந்தச் சந்திப்பின் மூலமாக நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1ஆம் தேதி இரவு முதல் 2ஆம் தேதி மதியம் வரை என்ன நடந்திருக்கிறது என்பது குறித்து நான் உங்களிடத்தில் விளக்கம் அளித்திருக்கிறேன் என்றார்.

கேள்வி: மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா?

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில்: நான் குறிப்பிட்டதை போல, யாரையும் நான் நேரடியாக சொல்ல விரும்பவில்லை. ஆனால் என்ன காரணத்தினால், அங்கு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி முறையான வகையில் அவர்களால் ஒளிபரப்ப இயலவில்லை என்பதற்கான காரணத்தை உங்களுடைய யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்’ என்றார்.