கணவர் மீது முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார்!

தன்னுடைய கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா, எம்எல்ஏவாக தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 6 மாத காலமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், டி.ஜி.பி ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சண்முகம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாய்மொழியாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, காரைக்கால் சீனியர் எஸ்.பி. கவுகால் நிதின் ரமேஷுக்கு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக தன் மீது பொய் புகாரை சந்திர பிரியங்கா அளித்துள்ளதாக, அவரது கணவர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார்.