ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னுனா, அது நடக்கவே நடக்காது: வானதி சீனிவாசன்

ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னு நீங்க நினைச்சீங்கனா, அது ஆர்.என். ரவியிடம் நடக்கவே நடக்காது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் சமீபகாலமாக உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததால் இந்த மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த சூழலில்தான், அண்மையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ். பாரதி, எரியும் நெருப்பில் மீண்டும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். “நாய்க்கறி சாப்பிடும் நாகாலாந்து மக்களாலேயே விரட்டி அடிக்கப்பட்டவர் தான் ஆளுநர் ரவி” என்று அவர் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம், திமுக தலைவர்கள் தொடர்ந்து ஆளுநரை தரக்குறைவாக பேசுவது வழக்கமாகி விட்டது என்றும், மறுபுறம், நாகாலாந்து மக்களை திமுக இழிவுப்படுத்தி விட்டது எனவும் பாஜக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-

திமுகவின் ஆர்.எஸ். பாரதியின் பேச்சை கவனித்து பார்த்தாலே உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். பொதுமேடைகளில் எந்த அளவுக்கு ஆபாசமாக பேச முடியுமோ அதை தங்கள் நிர்வாகிகள் மூலம் பேச வைத்து, அதை அந்தக் கட்சியின் தலைமை ரசித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆளுநர் ரவியை கேவலமாக பேசுவதற்காகவே ஆர்.எஸ். பாரதிக்கு ஒரு பதவியை கொடுத்து திமுக தலைமை அழகு பார்த்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, ஆளுநர் எதை பேசினாலும் அதை தங்களிடம் கேட்டுதான் பேச வேண்டும் ஆளும் திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காது. ஆளுநர் அவருடைய கருத்தை தெரிவிக்கிறார். உங்களுடைய (திமுக) சித்தாந்தத்தை தான் அவர் பேச வேண்டும் என்று நினைத்தால், இந்த ஆளுநரிடம் அது நடக்கவே நடக்காது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.