சனாதன பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்!

சனாதன தர்மம் ஒழிப்பு தொடர்பான தமது பேச்சு பேசினதுதான்; இதற்காக ஒருபோதும் தாம் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சனாதன ஒழிப்பு பேச்சுக்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான ஆ.ராசா எம்.பி. தரப்பு இன்று வாதத்தை முன்வைக்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட மாடல் அரசுன்னா என்னான்னு கேட்கிறாங்க.. நாங்க வாகனத்தில் வரும் போது தம்பி தீபாவளி வாழ்த்துகள்! தம்பி தீபாவளி வாழ்த்துகள் என தாய்மார்கள் சொல்கிறார்கள்.. இன்னொரு பக்கம் நம்முடைய இளைஞரணி தம்பிமார்கள், பெரியார் வாழ்க! பெரியார் வாழ்க என்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு. எல்லாருக்குமானதுதான் திராவிட மாடல் அரசு.

சமீபத்துல 2 மாதங்களுக்கு முன்னர் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. நான் பேசுனது இரண்டே நிமிசம்தான். காமராஜர் அரங்கத்தில்.. நான் பேசிட்டு போயிருந்தா யாருக்குமே தெரிஞ்சிருக்காது. ஆனால் அதைப் போய் பெரிசாக்கிவிட்டு பொய்யாக்கி பூதாகரமாக்கி நான் பேசாததை எல்லாம் பேசுனதா சொல்லி நானாவது பேசுனேன்..என் மேல வழக்கு வந்துருச்சு. உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாரு அமைச்சர் சேகர் பாபு.. இப்ப அவரு மேலயும் வழக்கு இருக்கு. என்னை மன்னிப்பு கேட்கனும் என்றெல்லாம் சொனாங்க.. நீ என்னா பண்ணினாலும் நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நான் பேசுனது பேசுனதுதான். சட்டப்படி சந்திப்போம்.. நீதிமன்றத்து மேல நம்பிக்கை இருக்கிறது. நாங்க எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவே இல்லை. சமூக நீதி வேணும்; அனைவரும் சமம் என்பதைத்தான் வலியுறுத்தி பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பையன்; கலைஞருடைய பேரன்; பேசுனா பேசுனதுதான். கொள்கையைத்தான் பேசி இருக்கிறேன். பின்வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எதாவதுன்னா நீங்கதான் பார்த்துக்கனும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.