உத்தரகாண்ட் சுரங்க விபத்து: 40 தொழிலாளர்கள் நிலை என்ன?

உத்தர்காஷியில் சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை நடந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பல மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியில் சில்க்யாரா மற்றும் போல்கோவன் கிராமங்களை இணைக்கும் வகையில் சார் தாம் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இருபுறமும் இருந்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களாக பணிகள் நடந்து வருகின்றன. இது முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வந்தால் உத்தர்காஷி முதல் யமுனோத்ரி வரையிலான 26 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்படும். இதிலிருந்து செல்லும் சாலைகள் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரினாத், கேதர்நாத் ஆகிய இமயமலையில் உள்ள புனித தலங்களை இணைக்கிறது. இதன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, தீபாவளி தினமான நேற்று காலை சில்க்யாரா பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே உடைந்து மூடிக் கொண்டது. சுரங்கத்தின் 30 மீட்டர் நீளப் பாதை உடைந்து விழுந்தது. இது நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இதனால் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ – திபெத் எல்லை போலீசார், எல்லையோர சாலைகள் அமைப்பினர் என 150க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர். சுரங்கத்தின் உள்ளே தொழிலாளர்கள் மூச்சு விடும் வகையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. பைப்கள் மூலம் குடிநீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை சுரங்கத்தின் உள்ளே தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். இவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உத்தர்காஷி மாவட்ட மேஜிஸ்டிரேட் அபிஷேக் ருஹேலா கூறுகையில், மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ட்ரில்லிங் இயந்திரங்கள் முழு வீச்சில் வேலை செய்து கொண்டிருக்கின்றன. பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் வழியே தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று தெரிவித்தார்.

உத்தர்காஷி சர்க்கிள் ஆபிசர் பிரசாந்த் குமார் பேசுகையில், சுரங்கத்தின் உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் உடன் தொடர்பை ஏற்படுத்தி விட்டோம். 15 மீட்டர் தூரத்திற்கு முன்னே நகர்ந்துள்ளோம். இன்னும் 35 மீட்டர் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். விரைவில் மீட்டு விடுவோம் என நம்பிக்கை அளித்தார்.