தமிழ்நாட்டுல இருக்குற கோயில்களை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கோங்க: சீமான்

தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களை எல்லாம் தயவுசெய்து எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனாதனத்தை ஒழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை வட மாநிலங்களில் பாஜக வேறு விதமாக பிரச்சாரம் செய்து வருகிறது. சனாதனம் என்றால் இந்து மதம் என்ற அர்த்தமும் வட மாநிலங்களில் இருப்பதால், இந்து மதத்தை அழிப்போம் என உதயநிதி பேசியதாக ஒரு பெரும் பரப்புரையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, கடந்த மாதம் தெலங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடி, “சனாதனத்தை ஒழிப்போம் என பேசும் திமுக கையில், இந்து கோயில்கள் ஏன் இருக்க வேண்டும்?” எனக் கேள்வியெழுப்பினார்.

அதுமுதலாக, தமிழக பாஜக தலைவர்கள் பலரும், இந்து கோயில்களை நிர்வகிப்பதில் இருந்து திமுக அரசு வெளியேற வேண்டும் என்றும், சனாதனம் வேண்டாம் என்பவர்களுக்கு, இந்து கோயில்கள் மூலம் வரும் உண்டியல் பணம் மட்டும் வேண்டுமா?” என்றும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இந்து சமய அறநிலையத்துறை ஒழிப்பதற்கான கையெழுத்து போடப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அதாவது ஒரு விஷயம் நடக்கவே நடக்காதுனு தெரிஞ்சுட்டா, அதை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதேபோல, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது நடக்கவே நடக்காது. அதனால் அண்ணாமலையும் பெரியார் சிலையை எடுத்துருவோம், இந்து சமய அறநிலையத் துறையை ஒழிச்சுருவோம்னு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்காரு. நாம கேட்டுக்குவோம். அவ்வளவுதான்.

சரி. நான் கேக்குறேன். இந்து அறநிலையத்துறை இல்லாம கோயில்கள் யார்கிட்ட போகும்? அரசாங்கத்திடம் கோயில்கள் இருக்கும் போதே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போயிருக்கு. இப்போ அரசாங்கமும் கவனிக்காமல் உங்ககிட்ட கோயில்களை விட்டுட்டா என்னென்ன நடக்கும்? கோயில்களை யார்கிட்ட கொடுப்பீங்க? அதானிட்ட கொடுப்பீங்களா.. அம்பானிட்ட கொடுப்பீங்களா? பள்ளிவாசல், தேவாலயங்களுடன் இந்து கோயில்களை ஒப்பிடுறீங்களே.. அவங்க உண்டியல் வருமானமும், இந்து கோயில் உண்டியல் வருமானமும் ஒரே மாதிரியா இருக்கு? யாருகிட்ட கோடி கோடியாக உண்டியல் வருமானம் வருது?

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை எல்லாம் எடுக்கணும்னு சொல்றீங்க. நானே சொல்றேன். மகாராசனா வந்து தயவுசெய்து எடுத்துட்டு போங்க. ஆனால் அதுக்கு முன்னாடி திருப்பதி கோயிலையும், சபரிமலை ஐயப்பன் கோயிலையும் எடுத்துட்டு வாங்க. நாங்களும் அனுமதி கொடுத்துடுறோம். பஞ்சாப் பொற்கோயிலை முதலில் எடுக்கணும். சம்மதமா? பள்ளிக்கூடம் உன்ட்ட இல்ல. கல்லூரி உன்ட்ட இல்ல. ஒன்னுமே இல்ல உன்ட்ட. சொந்தமாக ஒரு விமான நிலையமே உன்கிட்ட கிடையாது. உனக்கு எதுக்கு கோயிலு.. அதை வச்சிட்டு மட்டும் நீ என்ன பண்ணிற போற? என சீமான் கேள்வியெழுப்பினார்.

சீமானிடம், “உங்களிடம் விஜய் வாழ்த்து தெரிவித்த போது எது பற்றி எல்லாம் பேசினீர்கள்.. லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் குறித்து பேசினீர்களா?” எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

வாழ்த்து சொல்லும் போது என்னங்க அரசியல். விஜய்யும், நானும் யாருனு உங்களுக்கு தெரியும். நானும் அவரும் அண்ணன் தம்பி. அவருக்கு பிறந்தநாளில் நான் வாழ்த்து தெரிவிப்பேன். என் பிறந்த நாளில் அவர் வாழ்த்து தெரிவிப்பார். இதுவரைக்கு நீங்க அதை பற்றி கேட்டுருக்கீங்களா? இப்போ அவர் அரசியலுக்கு வர்றார்னு தெரிஞ்சதால நீங்க கேக்குறீங்க. நாங்க சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம். லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் பற்றி எல்லாம் நாங்க பேசல. அதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. அதுமாதிரி விஷயங்களை எல்லாம் விஜய் எளிதில் கடந்து சென்று விடுவார். அதை எல்லாம் ஒரு பிரச்சினைனு நினைச்சிட்டு பேசுற ஆளும் அவர் கிடையாது. நாட்டு மக்களோட பிரச்சினைதான் எங்களோட பிரச்சினை. இவ்வாறு சீமான் கூறினார்.