சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் 56 பேர் டிஸ்மிஸ்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் 56 பேரை தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. போதிய கல்வித் தகுதி இல்லாத காரணத்தினால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 ஆண்டு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. அப்போது பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியாகத் தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அப்போது பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்தும் அவர்களின் கல்வி தகுதி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பேராசிரியருக்குத் தேவையான கல்வித் தகுதி இல்லாமல் பலர் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

இதனிடையே பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தர் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டபோது மேலாண்மைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகள் இல்லாமல் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தகுதி இல்லாத பேராசிரியர்கள் 56 பேர் உயர் கல்வித்துறை உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையான அளவில் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக கல்வி பயின்றும் பிஹெச்டி படிக்காமல் உதவி பேராசிரியராகப் பணியில் இருந்ததும் கண்டுடிபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர் கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

அரசு விதிகளின்படி அவர்களின் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை வேந்தர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கு பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நிரவலில் சென்று வெளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் பணி நீக்க உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வளாகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரும் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் கல்வி தகுதி இல்லாமல் பணியாற்றியதாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.