தமிழக முதல்வர் சொன்னது சரிதான்.. ஆளுநர் பதவியே தேவையில்லை: சீமான்

தமிழக முதல்வர் சொன்னது சரிதான் என்றும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று சீமான் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் தாக்கல் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், அரசின் நடவடிக்கை அனைத்திற்கும் ஆளுநர் ரவி அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை. ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும் என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

தமிழக முதல்வர் சொன்னது சரிதான். இப்போது தான் அவர் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார். அவர் சொன்னதை நான் வரவேற்கிறேன். முதலில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தான் சொன்னாங்க.. ஆனால் நான் சொல்கிறேன் அந்த பதவியே தேவையில்லை என்று.. அது அவசியம் இல்லை. பேரறிஞர் அண்ணா கூட ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு ஆளுநர் அது இரண்டும் அவசியம் இல்லை என்று சொன்னார்கள்.. மக்களுக்கு ஒரு அரசை அமைக்க உரிமை இருக்கிறது. மக்களே வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசை அமைத்துக் கொள்கிறார்கள். அந்த அரசுக்கு முழு அதிகாரத்தை கொடுக்கிறார்கள். அதில், ஒரு மசோதாக்களை, தீர்மானங்களை, சட்டத்திட்டங்களை நிறைவேற்றி அதை செயல்படுத்திக் கொள்கிறோம்.

மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு பிரதிநிதி வந்து உட்கார்ந்துகொண்டு இதில் கையெழுத்து போடமாட்டேன். அதில் கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்லவது பெரிய தொல்லை. அந்த பதவியே தேவையில்லை. அது எதுக்கு?. தெண்ட கருமாந்திரம்.. உட்கார்ந்து ஒவ்வொன்றிற்கும் கருத்து சொல்லிக்கிட்டு. அவர் ஒரு தனி அரசு நடத்தி கொண்டு இருக்கிறார். சம்பளம் என் காசில் வாங்க வேண்டியது. எனக்கு எதிராகவே சிந்திக்க வேண்டியது.. பேச வேண்டியது. கொடுமை இது.. இந்த பதவி அவசியம் இல்லை. சங்கரய்யா என்கிறவர் ஒவ்வொரு தமிழ் பிள்ளைகளின், தமிழ் மக்களினுடைய இதயத்தில் வாழ்கிறார் அல்லவா அதை விட இந்த விருது எல்லாம் பெரிது அல்ல. நடிகர் திலகத்திற்கு சிறந்த நடிகர் விருதினை இந்திய அரசு கொடுக்கவில்லை. அவர் கையில் இருப்பதற்கு இந்த விருதுக்கு தகுதியில்லை என்று விலகிவிட்டது. அது போல தான் நீங்க கொடுக்கிற டாக்டர் பட்டம். அவருக்கு நீங்க கொடுத்தால் என்ன.. கொடுக்கவில்லை என்றால் என்ன.. சங்கரய்யா என்ற போராட்டக்காரர்.. விடுதலை வீரர்.. என்பதைவிட இதில் எதுவுமில்லை. என்னிடம் கேட்டால் நீங்க கொடுக்காமல் விடுவதே அவருக்கு பெருமையாக.. சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர வாகன பேரணி நடத்துகிறார். இது திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துமா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்து சீமான் கூறுகையில், “மோட்டார் பைக் ஓட்டுவதனால் ஒரு கட்சி வெற்றி பெற்று விடுமா. இது ஒரு விளையாட்டு” என்றார்.