பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது: வேல்முருகன்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறி அந்நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக இது குழந்தைகளின் மனநலனை கடுமையாக பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குழந்தைகள் சமூக சூழல்களிலிருந்தும், குடும்ப சூழலிருந்தும்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் எனும் கூறும் குழந்தைகள் நல ஆர்வலர்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் உருவகேலி சிந்தனைகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு அவர்கள் வந்துவிடுவதாக எச்சரித்துள்ளனர். இப்படி இருக்கையில் இந்நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் விமர்சித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் சார்பில், மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வேல்முருகன் பிக் பாஸ் குறித்து பேசியதாவது:-

பிக் பாஸில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அரைகுறை ஆடைகளோடு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாத்ரூம் போனால் முத்தம்.. படுக்கையில் முத்தம்.. இதுதானா தமிழ் சமூகத்திற்கு நீங்கள் செய்தது? இந்தக் கூட்டத்திலிருந்து விஜய் டிவி தொலைக்காட்சிக்கு எச்சரிக்கிறேன். என் தமிழுக்கென்று ஒரு தனி குணம் உண்டு. இந்த தமிழ் சமூகத்தை கேவலமான அநாகரிகமான பண்பாட்டு சீரழிவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இந்த அவலங்கள் தொடர்ந்து நீடிக்கும் எனில் ஒரு நாள் பிக் பாஸ் என்கிற அந்த கூடம் இருக்காது. எந்த பண்பாட்டை எனது இளைய தலைமுறையினருக்கு விதைக்கிறீர்கள்? எந்த நாகரிகத்தை எனது இளைய தலைமுறையினருக்கு சொல்லித் தருகிறீர்கள்? எவ்வளவு பெரிய அநியாயம் அக்கிரமம். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் அந்நிகழ்ச்சியில் வெறும் இரட்டை வசனங்கள் நிரம்பி இருக்கின்றன. உங்களால் வேறு தரமான நிகழ்ச்சி தயாரிக்க முடியாதா? அப்படி முடியவில்லையெனில் இழுத்து மூடிவிட்டுப் போங்கள். பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் பெரும் விளம்பர சுரண்டலுக்கு என் மொழியையும் என் இனத்தையும் என் பண்பாட்டையும் மோசமாக காட்சிப்படுத்தும் கலாச்சார சீரழிவை கொண்டு வந்து என் மக்கள் மீது திணிக்காதீர்கள். ஒரு மாதத்திற்குள் விஜய் டீவியும், கமல்ஹாசனும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சரி செய்யவில்லை எனில் அதை படம் பிடிக்கும் ஸ்டூடியோ இருக்காது என்பதை எச்சரித்துக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் எச்சரித்துள்ளார்.