தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.