உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு துணை நிற்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் உங்களின் ஆட்டம் பாராட்டத்தக்கது. ஒரு அற்புதமான வெற்றி. சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.

உலகக் கோப்பையில் உங்களின் (இந்தியா) திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.