பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லை: செல்லூர் ராஜூ

பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால், நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத் தொகையும் செலுத்துவதற்கு முயல்வேன் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தென் மாவட்ட மக்களின் குலசாமியாக மதிக்கப்படுகிறார் பென்னிகுயிக். முல்லைப்பெரியாறு அணைக்காக தன் உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னி குயிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். ஆண்டு தோறும் அவரது பிறந்தநாளை பொங்கல் வைத்து படைத்து வழிபடுகின்றனர். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தேனி உட்பட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கை நினைவு கூறும் விதமாக தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதி அவரது சிலைக்கு மற்றும் திருவுருவப்படத்திற்கு ஆங்காங்கே மாலை அணிவித்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் நினைவிடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமான தலைவர் தான் பென்னி குயிக், அவருடைய முயற்சியால அந்த அணை கட்டப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது கல்லறையை காண்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இறைவனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கல்லறையினை பார்க்கும் போது மன வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக உறுதிமொழி அளித்தது. ஜான் பென்னிகுயிக் சிலையை அமைத்து அதற்கான பணத்தை அவர்கள் கட்டவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை இங்கே சர்ச்சில் இருக்கிற உறுப்பினர்கள் சொல்லுகின்ற பொழுது ஒரு மிகப்பெரிய மன வேதனை ஏற்பட்டுள்ளது. ஒரு தமிழன் என்ற முறையில் அது தென் மாவட்ட மக்கள் 5 மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலையை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிக வருத்தமாக இருக்கிறது.

உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லாருக்கும் அல்வா கொடுத்தார்கள். ஆனால் இந்த நினைவிடத்தையும் பராமரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு அவர்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்கவில்லை. பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால் அதிமுக பொதுச்செயலாளரிடம் இதனை எடுத்துச் சொல்லி நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத் தொகையையும் செலுத்துவதற்கு நான் முயல்வேன். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுச்செயலாளரிடம் பேசி அந்த பணியை செய்வேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிப்படுத்தி கொள்கிறேன்.

இதே அதிமுக ஆட்சியாக இருந்தால் உரிய வகையில் பராமரித்து இருப்போம். இந்த திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு முன்பாகவே என்னுடைய முயற்சியால் மக்களிடத்திலே நிதி வசூல் பெற்று இந்த ஜான் பென்னி குயிக்கின் கல்லறையையும் சிலையும் சீரமைப்பேன். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.