திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் அவல நிலையில் இருக்கிறது: அண்ணாமலை!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த அமராவதி என்ற பெண் நுரையீரல் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் பிரச்சினை என்பதாலும் மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதாலும் இவருக்கு வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அமராவதி நேற்று மதியம் உயிரிழந்தார். மின்தடை ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், தமிழக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.