முதலமைச்சர் என்ன செய்தாலும் ஆளுநர் வேடிக்கை பார்க்கணுமா: சி.பி. ராதாகிருஷ்ணன்

“மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. எதை வேண்டுமானாலும் செய்யலாமா? அதை ஆளுநர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?” என்று ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதாக குற்றம்சாட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் அந்த மசோதாக்களில் ஆளுநர் கட்டாயம் கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது. அதுபோல, ஆளுநர் இவ்வாறு மசோதாக்களை கிடப்பில் போடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலும் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்று மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக பாஜக தலைவர்களும், எதிராக திமுக கூட்டணி தலைவர்களும் கருத்து தெரிவித்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் வருகை தந்த ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

ஆளுநரின் முதல் கடமையே அரசியல் சாசனத்தை காப்பது தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சாசனத்துக்கு மாறாக எந்த சட்டம் இயற்றப்பட்டாலும் அதை கிடப்பில் போடுவதும், அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பதும், அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்பதும் நிச்சயமாக ஒரு ஆளுநரின் கடமை. முதலமைச்சர் தான் அரசை நடத்துகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அரசியல் சாசனம் அங்கீகரிக்கவில்லை.

ஆளுநர் வாங்கும் சம்பளம் என்பது நாங்கள் தரும் பிச்சை என்று ஒரு திமுக அமைச்சர் சொல்கிறார். நான் அவரை பார்த்து கேட்கிறேன்.. நீங்கள் வாங்கும் சம்பளம் யார் தருகின்ற பிச்சை? எல்லோருக்குமே மக்கள் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் கிடைக்கிறது. நீங்கள் (திமுக அரசு) கொலைக்காரர்களை கட்டிப்பிடிப்பீர்கள். வெடிகுண்டு வைத்தவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று ஊர்வலம் நடத்துவார்கள். அதை நீங்கள் வேடிக்கை பார்ப்பீர்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நீங்களும் தீர்மானம் நிறைவேற்றுவீர்கள். இதையெல்லாம் ஒரு ஆளுநர் தட்டிக்கேட்கக் கூடாது என்றால் எதற்காக ஆளுநர் இருக்க வேண்டும்?. இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.