தமிழகத்தின் தலைநகராக திருச்சி தான் இருக்கணும்: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் தலைநகராகத் திருச்சி இருப்பது தான் சரியாக இருக்கும் என்ற திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், நிச்சயம் அது ஒரு நாள் மாறும் என்று தெரிவித்தார்.

திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் இன்று திருச்சிக்குச் சென்றுள்ளார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கே100 அடி உயர திமுக கொடிக் கம்பத்தில் திமுக கொடியையும் அமைச்சர் துரைமுருகன் ஏற்றினார். அப்போது அங்கே அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் தலைநகராகத் திருச்சி தான் இருக்க வேண்டும் என்றார். தலைநகர் என்பது மாநிலத்தில் இருக்கும் அனைவரும் வந்து செல்ல ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற அமைச்சர் துரைமுருகன், வரும் காலத்தில் நிச்சயம் திருச்சி தலைநகராக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

திமுகவுக்கே திருச்சி மாவட்டம்தான் கேப்டன். இந்தக் கட்சி தேர்தலில் நிற்கலாம் என்று பெர்மிஷன் கொடுத்த மாவட்டமே திருச்சி தான். அன்று மட்டும் மாற்றி வாக்களித்திருந்தால் நான் உட்பட இங்குள்ள யாருமே அமைச்சாகி இருக்க முடியாது. தி.க. போலவே நாங்களும் சிறு சிறு கூட்டங்களை நடத்திக் கொண்டிருப்போம். ஆனால் திருச்சி தான் அனைத்தையும் மாற்றியது. திருச்சி தலைநகராக இருப்பதே சரி: இந்த திருச்சியைத் தலைநகராக்க வேண்டும் என எம்ஜிஆர் கருதினார். எனக்கு அதிமுகவைப் பிடிக்காது என்றாலும் அந்த கருத்து பிடிக்கும். டெல்லி ரொம்ப தூரத்தில் இருப்பதால் தான் நமக்கு அவர்கள் அந்நியமாகத் தெரிகிறார்கள். இந்தியாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் தலைநகராகத் திருச்சி இருக்க வேண்டும். அதுதான் சரி.. யாராவது ஒருவர் வருவார்கள். நிச்சம் இது நடக்கும். நிச்சயம் நடக்கும். இந்த திருச்சி தான் அனைத்து கட்சிக்கும் முன்னோடி மாவட்டமாக இருந்துள்ளது. பல முக்கிய நிகழ்வுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. வரலாற்றில் இந்த ஊரின் பெயர், இந்த ஊரில் இருக்கும் தலைவர்களின் பெயர் இல்லாமல் இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.