மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கே திடீரென துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிபவர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், சுரேஷ் பாபுவை விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி என்பவர் ரூ3 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து வேறு வழியில்லாமல் அங்கித் திவாரிக்கு டாக்டர் சுரேஷ் பாபு கடந்த மாதம் ரூ 20 லட்சம் லஞ்சம் கொடுத்தார். இருப்பினும், விடாமல் அவரை மிரட்டியுள்ளார். மேலும், 31 லட்சம் லஞ்சம் த வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து டாக்டர் சுரேஷ் இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி ரசாயனம் தடவிய ரூ 31 லட்சம் நோட்டுகளை சுரேஷ் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு தப்ப முயன்ற திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திவாரியை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர்.

இதையடுத்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்குச் சென்றனர். முதலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு அனுமதிக்காத நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு திவாரியின் பணிபுரிந்த இடத்தில் மட்டும் சோதனையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தொடங்கினர். இந்த சோதனை காரணமாக அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவப் படையினர் அங்கே சென்றுள்ளனர். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு தொடரும் நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் துணை ராணுவப்படை வீரர்கள் நுழைந்துள்ளனர். இதனால் மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இப்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.