கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு: ஃபைலை ஆளுநருக்கே மீண்டும் அனுப்பிய தமிழக அரசு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரியது தொடர்பான கோப்பை மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு நீண்ட தாமதம் செய்யாமல் ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு பல முறை முறையிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. அப்போது, ஆளுநர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சில மசோதாக்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனிடையே, 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் அந்த மசோதாக்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சூழலில், ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டவர் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முதல் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் ? என மத்திய அரசு தலைமை வழக்கறிஞருக்குத் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என தெரிவித்து, வழக்கை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், 31 கைதிகளை முன்விடுதலைக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. கோப்புகள் பரிசீலினையில் இருப்பதாக கூறிய ஆளுநர், தற்போது திருப்பி அனுப்பியுள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக இருப்பதாகவும், விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக இருப்பதாகவும் கூறி திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்வது தொடர்பான கோப்பு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக உள்ளது எனக்கூறி கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழக அரசு சார்பில் இந்தக் கோப்பு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.