கோவை சென்ற வைக்கோல் லாரிக்குள் 3 டன் வெடிபொருட்கள்: நாராயணன் திருப்பதி சந்தேகம்!

கோவை நோக்கிச் சென்ற வைக்கோல் லாரியில் 3 டன் வெடி பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சந்தேகம் எழுப்பியுள்ளது தமிழக பாஜக.

தருமபுரியிருந்து கோவைக்கு மூன்று டன் வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக 29ஆம் தேதி இரவு சேலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக களமிறங்கி, வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யும் பணிகளை தொடங்கியது காவல்துறை. கருப்பூர் எஸ்.எஸ்.ஐ குணசீலன் தலைமையிலான காவல்துறையினர் ஓமலூர் டோல்கேட்டில் நின்று ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்தனர். விடியற்காலை நேரத்தில் ஒரு லாரியில் வைக்கோல் போர் வந்துள்ளது. அதை முழுமையாக சோதனை செய்ததில், வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் 100 பெட்டிகளில் ஜெலட்டின் ஜெல், 2,580 கிலோ, ஒரு பெட்டியில், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 3 மீட்டர் ஒயர் என மொத்தம் 3 டன் வெடிபொருட்கள் இருந்தன. லாரியை ஓட்டிவந்த தருமபுரியை சேர்ந்த டிரைவர் இளையராஜாவை போலீசார் கைது செய்தனர். டிரைவரை கைது செய்து விசாரித்ததில் வைக்கோல் போரை ஏற்றிக்கொண்டு லாரியை மெதுவாக ஓட்டும்படியும், கோவைக்கு சென்றபிறகு கூப்பிடுமாறு சிலர் அனுப்பியதாக கூறியுள்ளார். டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களை லாரியில் அனுப்பியதற்கு பின்னணியில் ஏதேனும் சதி வேலை இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருட்கள் கோவைக்குத்தான் கொண்டு செல்லப்பட்டதா அல்லது அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரைவரிடம் கொடுக்கப்பட்ட போன் நம்பர் உண்மையில் யாருடையது என்ற விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜெலட்டின் ஜெல், டெட்டனேட்டர் இருந்த பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

தருமபுரியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டிகளில் 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை மீட்டுள்ளது சேலம் காவல்துறை. இந்த வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் இளையராஜா கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக இந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். துரிதமாக நடவடிக்கை எடுத்த சேலம் காவல்துறையினரை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், இவ்வளவு வெடி பொருட்களை தைரியமாக தமிழகத்தில் கடத்தும் நிலை வந்துள்ளது கவலைக்குரியது.

குறிப்பாக கடந்த வருடம், அக்டோபர் 23ஆம் தேதியன்று கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே குண்டு வெடித்து ஜமிசா முபீன் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதி உயிரிழந்தது இன்றளவும் கோவை நகரை பதட்டத்தில் வைத்துள்ள நிலையில், அதே கோவைக்கு இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது. காலம் தாழ்த்தாமல், காவல்துறையினர் இந்த வெடிபொருட்களை சட்ட விரோதமாக எடுத்து செல்ல முயன்ற கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதிப் பூங்கா என அழைக்கப்படும் தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.