அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது: ஜெயக்குமார்

அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. கூட்டணியில் இருக்கும் போது எத்தனையோ முறை அண்ணாமலை அதிமுகவை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார். ஆனால், அதிமுகவோ எதுவும் நடக்காதது போல கடந்து சென்றது. அதிமுகவின் இத்தகைய நடவடிக்கைகளால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘அடிமை அதிமுக’ என்று விமர்சிக்கும் நிலைக்கு வந்தன. இருந்தபோதிலும் அதிமுக அமைதி காத்தது. இந்த சூழலில்தான், அதிமுகவின் பெயரிலேயே இருக்கும் தலைவரான அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. இதற்கு மேலும் விட்டால், கட்சி தொண்டர்களே வெகுண்டெழுந்து விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக தலைமை, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூட்டணியில் இருந்து வெளியேறிய போதிலும், பாஜகவை பெரிய அளவில் விமர்சிக்காமல் தான் அதிமுக இருந்து வருகிறது.

இந்த சூழலில், மீண்டும் அதிமுகவை சீண்டும் வகையில் பேசினார் அண்ணாமலை. சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து பேசிய அண்ணாமலை, “ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை” என விமர்சித்தார். இது, திமுகவுடன் சேர்த்து அதிமுகவையும் விமர்சிக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “அண்ணாமலையா.. யாருயா அவரு.. ஓ.. இந்த இன்ஸ்டால்மென்ட்ல நடைப்பயணம் போறாரே அவரா? இப்போ திமுகவை நாங்க குறை சொல்றோம்னா அதுக்கு காரணம் இருக்கு. ஒரு செயல்படாத அரசாக, மக்கள் விரோத அரசாக இருப்பதால் நாங்க விமர்சிக்கிறோம். எங்க ஆட்சியை எப்படி அவரு குறை சொல்லலாம்? எங்க (அதிமுக) ஆட்சி நடக்கும் போது அண்ணாமலை எங்கே இருந்தாரு? கர்நாடகாவுல போலீஸா இருந்தாரு. அவருக்கு இங்கே என்ன நடந்துச்சுனு எப்படி தெரியும்? காமாலை வந்தவனுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சளாக தெரிவதை போல, அண்ணாமலையின் கண்ணில் தான் கோளாறு இருக்கிறது” என அவர் கூறினார்.