அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிறையில் அடைப்பு!

லஞ்சம் வாங்கி பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை, மதுரையைச் சேர்ந்த மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவரான டாக்டர் சுரேஷ் பாபு என்பவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதனிடையே, இந்த வழக்கை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டுமானால், தங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளும் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் முதலில் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் கொடுத்திருக்கிறார் டாக்டர் சுரேஷ் பாபு. இதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக தர வேண்டிய லஞ்சப்பணத்தை கேட்டு சுரேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையினர் தொந்தரவு கொடுத்தனராம். இதனால் வெறுத்துப் போன சுரேஷ் பாபு, இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதன்பேரில், அவரை கையும் களவுமாக பிடிக்க ஸ்கெட்ச் போட்டனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார். இதனை தெரிந்துகொண்டு இன்றைக்கு தப்ப முயன்ற அங்கித் திவாரியை விரட்டிச் சென்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், இங்கு சோதனை செய்ய முடியாதபடி அமலாக்கத்துறை தடுத்ததால் பெரும் போராட்டத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். இதில் பல ஆணவங்கள் பிடிபட்ட நிலையில், அங்கித் திவாரியை போலீஸார் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரை 15 நாடகள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்பேரில், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் வாங்கி அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தமிழகத்தில் பிடிபட்டதும், அவர் சிறையில் அடைக்கப் போவதும் தேசிய செய்தித் தொலைக்காட்சிகளிலேயே தலைப்புச் செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் தற்போது விடுத்துள்ள அறிக்கையில், “அங்கித் திவாரி மட்டுமல்லாமல் மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே மதுரை, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கித் திவாரியை போல இன்னும் பல அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கு தொடர்பாக அடுத்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவோடு இரவாக சாஸ்திரி பவனுக்கு நூற்றுக்கணக்கில் வந்த சிஆர்பிஎப் துணை ராணுவப் படையினர், அந்தக் கட்டிடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த நடவடிக்கையை சிஆர்பிஎப் படையினர் எடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் அமலாக்கத்துறை அலுவலகத்தை சோதனையிடுவதை தடுக்கும் வகையிலேயே இதுபோன்ற நடவடிக்கையை சிஆர்பிஎப் எடுத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.